சனி, 6 டிசம்பர், 2008

இந்தியத் தாயின் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள்! தாக்குதல்களின் மூளை யார்???

கிட்டத்தட்ட 200 பேரை காவுகொண்டிருக்கும் மும்பை பயங்கரவாத தாக்குதலை ஈர நெஞ்சுள்ள எவரும் கண்டிக்காமல் இருக்கவியலாது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் எம்மத மொழி இனத்தவராயினும் சரியே...! அவர்களுக்கு ஆக கூடிய தண்டனையை வழங்க வேண்டும்.

1993இலிருந்து நம் தாய்த்திருநாடு குண்டுவெடிப்புகளை சந்தித்து வருகிறது.
1992 பாபரி மஸ்ஜித் இடிப்பும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான எண்ணற்ற இன அழித்தொழிப்பு கலவரங்களும்
1993 மும்பை குண்டுவெடிப்புகளுக்கு வித்திட்டன என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. 1993 மும்பை குண்டுவெடிப்பு என்பது முஸ்லிம்களின் எதிர்வினை என ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் அதைத் தொடர்ந்து இன்று வரை நடக்கும் அனைத்து விதமான குண்டுவெடிப்புகளுக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தியே ஹிந்துத்துவ பாஸிஸ்டுகள் ஊடகம் அறிவுத்துறை அரசு கட்டமைப்பு போன்றவை பழிசுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இத்தகைய அபாண்டத்தை நடுநிலையாளர்கள் மதச்சார்பற்ற இடதுசாரிகள் சிறுபான்மையினர் தெஹல்கா உள்ளிட்ட ஒரு சில ஊடகவியலாளர்கள் மறுத்தபோதிலும் வீண் பழி என்ற சேறிறைப்பு தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில்தான் மாலேகாவ் குண்டுவெடிப்பு பல உண்மைகளை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லி நிற்கின்றது.
குற்றஞ்சாட்டியவர்களே குற்றவாளிக் கூண்டில்!!
பாஸிஸ நரியின் சாயம் வெளுத்தது!!!
புர்ணா, ஜல்னா, பர்பானி, சம்ஜோதா தொடர்வண்டி, தென்காசி, நான்டேட், கான்புர், மாலேகாவ், செறுவாஞ்சேரி என ஹிந்துத்துவ பாஸிஸ்டுகளின் வெடிகுண்டு கைவரிசை வெளிச்சத்திற்கு வந்தது.
ஆர்.டி.எக்ஸ்., ராணுவம் என கிணறு தோண்ட ஒன்றன்பின் ஒன்றாக புதம் கிளம்பிய கதையாக கடைசியில் மாலேகாவ் பாஸிஸ்டுகள் தங்களது தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர்களான இந்தர்ஜித் மோகன் பாகவத் போன்றவர்களை கொல்வதற்கு முனைந்த செய்தி மயக்க நிலை சோதனைகள் மூலம் கசியத் துவங்கின.
தையா தக்கா என கூத்தடித்த சங்கபரிவாரம் என்னடா இது...? வளர்த்த கடா மார்பில் பாய்கிறதே...! என மூச்சடைத்து நின்றது. இந்நிலையில் மாலேகாவ் குற்றவாளிகளில் ஒருவரான ஜம்மு மடத்தின் சாமியார் திரிவேதியின் மடிக்கணிணி கைப்பற்றப்பட்டு இன்னும் பல பயங்கர சங்கதிகள் வெளிவரும் தருணத்தில்தான் மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன.
மாலேகாவ் பாஸிஸ குண்டு சதியை தோண்டித் துருவி அம்பலத்திற்குக் கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்.) இன் தலைவர் ஹேமந்த் கர்கரே ஐ.பி.எஸ். உட்பட 3 உயர் அலுவலர்கள் மும்பை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஹேமந்த் கர்கரே அவர்கள் 1983ஆம் வருட இந்திய காவல் பணி அணியைச் சார்ந்த நேர்மையான - நீதியான அலுவலர். மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்பு கர்கரே அளித்த ஒரு பேட்டியில் மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் எங்களது 90 சதவிகித நேரத்தை செலவிடுகின்றோம்... இவ்வழக்கை நாங்கள் விசாரணைக்கு எடுத்த பிறகு எனது வீட்டிற்கு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என தெரிவித்திருந்தார். இதன் பிறகே அவர் மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்படுகிறார்.

இத்தகைய பின்னணியில் மும்பை பயங்கரவாத தாக்குதல்களைப் பார்க்கும்போதுதான் பயங்கரவாத சதியின் முழு பரிமாணத்தையும் புரிய முடியும்.
நமக்கு முன் எழும் ஐயங்களும், வினாக்களும்:
(1) சங்பரிவாரத்திற்கும் பா..ஜ.க.விற்கும் அரசியல் ரீதியான சரிவுகள் ஏற்படும்போதும் தேர்தல்கள் வரும்போதும் உள்நெருக்கடி வரும்போதும் தவறாமல் நாட்டில் குண்டுகள் வெடிப்பதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதுமாக இருக்கின்றதே... இது எப்படி?
(2) ஏடிஎஸ் தலைவர் கர்கரே உட்பட அதன் 3 அலுவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கூச்சலிட்டு கும்மாளமடித்து தங்களது மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பாஸிஸ்டுகளின் எதிரியான கர்கரேதான் பயங்கரவாதிகளின் எதிரியும் என்று ஆகிறதல்லவா...?

(3) நடுவண் உள்துறை இணையமைச்சர் சிறீபிரகாஷ் ஜெய்ஷ்வால் அளித்துள்ள பேட்டியில் பயங்கரவாத தாக்குதல்கள் வலது சாரி இந்து கட்சிகளினால் உருவாக்கப்பட்ட சதித்திட்டமாகக் கூட இருக்கலாம். கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு சற்று முன்னர் பெங்களுருவில் தொடர்குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அதேபோல்தான் இன்னும் நான்கு மாநிலங்களில் (மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மிசோரம் கஷ்மீர்) தேர்தல் நடக்கவுள்ளது. குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாக ஏடிஎஸ் படையை குறிவைத்து தாக்கிவரும் வேளையில் அப்படையின் 3 மூத்த அலுவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவையனைத்தும் மேற்கொண்டு நடக்கவிருக்கும் விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்... (சான்று: டெக்கன் க்ரானிக்கல் - 29.11.2008) என தெரிவித்துள்ளார்.
(4) பொடா சட்டத்தை ஆதரிப்பவரும் ஜாமியா நகர் போலி மோதல் கொலைகளை சரிகண்டவருமான பாஸிஸ சிந்தனை கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் நடுவண் உளவு அமைப்பான IB முன்னாள் இயக்குனருமான எம்.கே.நாராயணன் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரான அத்வானியை மாலேகாவ் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தித்து ஆறுதல்படுத்தி உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நடந்த சில நாட்களில்தான் மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இவ்விருவரின் சந்திப்பில் பரிமாறப்பட்ட விஷயங்கள் எவை...? படிந்த பேரங்கள் என்னென்ன?? என்பவை வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

(5) முதலில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் 25 பேர் என்றன அதிகார வர்க்கமும் ஊடகங்களும். ஆனால் 9 பேர் கொல்லப்பட்டு ஒருவன் மட்டும் உயிருடன் பிடிபட்டுள்ளான். இதில் பிடிபட்டவனையும் கொல்லப்பட்டவர்களில் ஒருவனையும் மட்டுமே படம் பிடித்துக் காட்டினர். மீதி சடலங்களை ஏன் படமாக வெளியிடவில்லை...? இப்போது 5 தீவிரவாதிகள் தப்பிவிட்டனர் என்கின்றனர். (பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது நடந்த - நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் தொலைக்காட்சியில் காட்டப்படவும் இல்லை. அவர்களின் உயிர் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆக வந்தது எத்தனை பேர்...? செத்தது எத்தனை பேர்...? தப்பியது எத்தனை பேர்...? தப்பியவர்கள் சென்றது எங்கெங்கே...???
(6) தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தாஜ் ஓபராய் விடுதிகளையும் நரிமன் கட்டடத்தின் உள் அமைப்புகளையும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு பரிச்சயத்திற்கு பல மாதங்கள் தேவைப்படும். அப்படியெனில் அவர்கள் எப்போது இங்கே வந்தார்கள்...? எங்கெல்லாம் தங்கினார்கள்...? என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் ஏடிஎஸ்-உம் ஐ.பி.-உம் என்ன செய்து கொண்டிருந்தன...???
(7) இப்படியொரு தாக்குதல் நடக்கும் என நடுவண் மற்றும் மாநில அரசை ஏடிஎஸ்வும் ஐபி-யும் எச்சரித்திருந்தன. ஆனால் தொடர்புடையவர்கள்தான் அலட்சியமாக இருந்துவிட்டனர் என திட்டமிட்டே ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்த செய்தியில் சதிக்கும்பலின் செயற்கைக் கோள் வழி செல்லிட தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதின் அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்ததாகக் கூறும் நடுவண் அரசின் ஒற்றாடல் அமைப்புகள் இந்த சதிக்கும்பல் இந்தியாவில் தங்கிய இடத்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் அறிந்தும் மறைத்தது ஏன்?
(8) மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹிந்துத்துவ சதிக்கும்பலுக்கு பயிற்சியளித்ததில் முன்னாள் - இன்னாள் ராணுவ அலுவலர்களுடன் ஐபி-யைச் சார்ந்த உளவு அலுவலரும் பயிற்சியளித்திருக்கின்றார். ராணுவ அலுவலர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் முதலில் அடிபட்ட அந்த ஐபி உயரதிகாரியின் பெயரை அப்படியே அமுக்கிவிட்டனர். இதை பாஸிஸ சிந்தனை சிற்பியான சோ தனது துக்ளக் இதழில் பின்வருமாறு சரிகண்டுள்ளார்:

(மாலேகாவ் விஷயத்தில்) ...............அதிகாரிகளில் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உளவுத்துறையினருக்கு வகுப்பு நடத்தியவர் என்று ஒரு செய்தி கூறுகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க எதிர்பயங்கரவாத முறையை உலக நாடுகள் சில கடைப்பிடிப்பதாகக் கூறப்படுவதுண்டு. அம்மாதிரி ஏதாவது நடந்தால் அது வெளியே தெரியாத வரைதான் நாட்டுக்கு நல்லது. அது பகிரங்கப்படுத்தப்படுவதே ஒரு மிகப்பெரிய தவறு............ (26.11.2008 துக்ளக்)
ராணுவம் நீதிமன்றம் நாடாளுமன்றம் என அனைத்தையும் விட உளவுத்துறைதான் பாஸிஸ்டுகளின் தலைமைப் பீடம் முதன்மைச் செயல்களம் இறுதிப் புகலிடம் என்பதயல்லவா இது நிரூபிக்கின்றது...?
(9) நாடாளுமன்றம் நீதிமன்றம் கணக்கு தணிக்கைக் குழு என சனநாயக நாட்டின் எந்தவொரு நிர்வாக அமைப்பிற்கும் விடை சொல்லத் தேவையில்லாத வரைமுறையற்ற தணிக்கைக்கு உட்படாத பண வரவு - செலவு செய்யும் RAW, ஐ.பி. என்ற நடுவண் ஒற்றாடல் அமைப்புகளின் ஓய்வுபெற்ற அலுவலர்களான பி.ராமன், மலோய் கிருஷ்ண தார் என்போரும் இன்னபிறரும் தங்களது பாஸிஸ பாசத்தையும், சார்பையும் என்றுமே மறைத்ததில்லை. பாஸிஸ்டுகளுக்கு மந்திராலோசனை தேர்தல் வெற்றிக்கு உதவுதல் என தங்களது பதவிக்காலத்திலும் அதற்குப் பின்னரும் இவர்கள் உதவியுள்ளனர்.
இப்படி மக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து - மொழி, இன, மத சிறுபான்மையினரை வேட்டையாடியும், பாஸிஸ்டுகளுக்கு முழு ஆதரவுக்கரம் நீட்டியும் வரும் இந்த உளவுத் துறைகள்தான் மும்பை பயங்கரவாத தாக்குதல்களை பாஸிஸ்டுகளுடன் இணைந்து நடத்தியிருக்க அத்தனை வாய்ப்புகளும் உள்ளன.
பொதுவாகவே எதிரி நாடுகளிலும் எதிர்போராளி முகாம்களிலும் அரச உளவுத்துறையினர் இரட்டை முகவர்கள் என்றழைக்கப்படும் தங்களது கையாட்களை பதியம் போட்டு வைத்திருப்பார்கள். தாங்கள் ஏதாவது குற்றத்தில் - சிக்கலில் மாட்டும்போது அவற்றிலிருந்து தப்பிக்க இந்த இரட்டை முகவர்கள் மூலம் படுபயங்கரமான தாக்குதல்களைத் தூண்டிவிடுவர்.

குயுக்திக்கும் குறுமதிக்கும் நரித்தந்திரத்திற்கும் அழிவு வேலைகளுக்கும் மூல பிறப்பிடமும் தலைமைக் குருபீடமும் ராஜகுருவுமான அர்த்த சாஸ்திப் புகழ் கவ்டில்யன் என்றழைக்கப்படும் சாணக்கியனின் ஞான உபதேசங்களின் ஒட்டுமொத்த சொந்தக்காரர்களும் அதன் வழி தப்பாமல் நடக்கும் பின்தோன்றல்களுமான இந்திய உளவுத்துறையினர் தங்களது பொறுப்புகளையும் உடந்தையையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யைக் காரணங்காட்டி அவ்வளவு எளிதில் தப்பித்துவிட இயலாது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீதிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சற்றும் குறைந்ததல்ல இவர்களின் மீதான குற்றச்சாட்டு!

(10) மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த அடுத்த நாளே புதுதில்லி செய்தித்தாள்களில் பயங்கரவாதத்துடன் போரிட பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பீர்... என்ற முழுபக்க விளம்பரம் வெளிவந்தது. பயங்கரவாதம் பாஸிஸம் மக்களின் பிணக்குவியல் இவற்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் பதவிப் பித்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்...?
(11) மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு வாரம் கழித்து பெரும் மக்கள் திரளடங்கிய அஞ்சலி கூட்டம் மும்பை தாஜ் விடுதியருகில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை முழக்கமான பாரத் மாதா கீ ஜெய்! என்ற கூக்குரல் எழுப்பப்பட்டதுடன் பாஸிஸ்டுகளின் நெடுநாளைய கோரிக்கையான பொது சிவில் சட்டம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து முழுமையாகப் பலனடையத் துடிப்பது யார்...? என்பதிலிருந்தே பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையும் அவர்கள்தான் என்பதற்கு இதை விட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
பாஸிஸ்டுகள் செய்த - செய்யப்போகிற அறுவடைகள்:
80 வயதைக் கடந்த - படுகிழவரான அத்வானிக்கு தலைமையமைச்சர் பதவி இருக்கையின் மீது இளமை மாறாத குறியும் அத்துடன் கூடவே கொலை வெறியும்தான்! சற்றொப்ப சில மாதங்களே தொலைவிலுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடத் துடிக்கும் அத்வானிக் கும்பல் அதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு வரலாறே சாட்சி!
25.11.2008 செவ்வாய்க்கிழமை மாலை வரை மாலேகாவ் குண்டுவெடிப்புகளை விசாரணை செய்த ஒரே குற்றத்திற்காக யுவுளு படையினரைக் குறைகூறி வந்த பாஸிஸ பரிவாரம் அன்றிரவு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பலியான யுவுளு அலுவலர்களின் குடும்பங்களுக்கு தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளித்தது. நேர்மையான அலுவலர் கர்கரேயின் அடியொற்றி அவரது அன்பு மனைவி பாஸிஸ்டுகளின் இந்த இழிபரிசை வாங்க மறுத்துவிட்டார்.
சாம - பேத - தான - தண்ட என்ற நாற்சூத்திரத்தில் முதலில் தண்டத்தையும் பின்னர் தானத்தையும் நீட்டுகிறது பாஸிஸம். தன்னை அம்பலப்படுத்த முயன்ற யுவுளு இன் மூத்த அலுவலர்களுக்கு குண்டுகளையும் அவர்களின் குடும்பத்தினருக்கு பண முடிப்புகளையும் வழங்குவதன் மூலம் பணியிலிருக்கும் ஏனைய யுவுளு படையினருக்கும் இந்திய காவல் - நீதி கட்டுமானத்திற்கும் பாஸிஸ பரிவாரம் ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது: எங்களை சீண்டினால் குண்டுதான் கிடைக்கும். அடங்கிக் கிடந்தால் பணமுடிப்பைப் பரிசாகத் தருவோம்...

மாலேகாவ் குண்டுவெடிப்பு விசாரணையில் ஏடிஎஸ் உடைய முழு நேரமும் செலவிடப்பட்டதால்தான் மும்பை பயங்கரவாத தாக்குதல்களை அவர்களால் தடுக்கவியலாமற்போயிற்று... என அத்வானியும் அவரது ஆஸ்தான குரு துக்ளக் சோவும் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர்.
இவர்களின் இந்த அறிக்கைகள் மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் காரணத்தையும் பின்னணியையும் யாருக்கும் புரியும் வண்ணம் எளிதாக சுட்டி நிற்கின்றன.
இந்த மும்பை தாக்குதல்களின் மூலம் பாஸிஸ்டுகள் சாதித்தவை:
  • மாலேகாவ் உட்பட முழு தேசத்தையே கரிக்கக் கூடிய பாஸிஸ்டுகளின் நவீன ஆயுதத் திறன் பற்றிய விவாதம் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது.
  • ஒரிஸ்ஸா கர்நாடகம் கேரளம் தொடங்கி கிறிஸ்துவர்களுக்கு எதிராக கொலை கொள்ளை பாலியல் வன்முறை தீயிடல் விரட்டுதல் என இனத்தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்க பிரிட்டன் நாடுகளின் வெறுப்பை சம்பாதித்த பாஸிஸ பரிவாரம் அதை மடைமாற்ற மும்பை பயங்கரவாதிகள் மூலம் அமெரிக்க பிரிட்டன் குடிமக்களைக் கொன்றுவிட்டு பழியை பகைநாடு பாகிஸ்தான் மீது வெற்றிகரமாகத் திருப்பிவிட்டது.
  • தேர்தலை சந்திக்கும் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் இதன் மூலம் பா.ஜ.க. முயற்சித்துள்ளது.
  • மாலேகாவ் ஒரிஸ்ஸா சம்பவங்களைத் தொடர்ந்து விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் போன்ற பாஸிஸ படையணியை தடை செய்யும் கோரிக்கை நாடு முழுக்க வலுவாக எழுந்தது. மும்பை புரளியில் அதுவும் வெற்றிகரமாக கடாசப்பட்டுவிட்டது.
  • இந்தியா விடுதலையடைந்து 60 ஆண்டுகளாகின்றன. நம் தாயகத்தின் மீதான முதல் பயங்கரவாத பாஸிஸ தாக்குதல் - தேசத்தந்தை காந்தியின் படுகொலையாகும். அதன் பிறகு பெரும் நிகழ்வுகளாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குஜராத் இன அழித்தொழிப்பு தற்சமயம் மும்பை பயங்கரவாத தாக்குதலும் நடைபெற்றிருக்கின்றன.
  • இந்திய திருநாட்டின் சனநாயகம் கருத்துரிமை நல்லிணக்கம் நீதி நிர்வாகம் குடிமைச் சமூகம் என அனைத்தின் மீதுமான முழு அளவிலான போர் அறைகூவலை அறிவித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஸிஸ பரிவாரம். இந்த பாஸிஸ மூர்க்கத்தனத்தை தற்போது நடைமுறையிலிருக்கும் சனநாயக நாடாளுமன்ற நீதி நிர்வாக நடைமுறைகளினால் தடுத்திட இயலவில்லை என்பதும் ஹிந்துத்துவ பாஸிஸ்டுகளுக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

    நிறைவாக
    ...
    நம் தாய்த்திருநாடு மெல்ல பாஸிஸத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டிவிட்டு பின்னர் அதையே காரணங்காட்டி தடா பொடா போன்ற ஆள்தூக்கி சட்டங்களை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் ஒரு கெடுபிடி அரசை நாடு முழுக்க நிறுவும் ஒரு பாஸிஸ யுக்தி வெற்றிகரமாக தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறது.
    இந்த நகர்வைச் சுமூகமாக்கும் ஒரு யுக்திதான் கேள்விகள் கேட்காதே... என்ற ஒற்றை வரி ஹிதோபதேசம் சனாதன அறிவுஜீவிகளிடமிருந்தும் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் தொற்றியிருக்கின்ற அவர்களின் கைத்தடிகளிடமிருந்தும் உரக்க வெளிப்படுகின்றது.

    கேள்விகள்
    கேட்க முடிகின்ற விடை சொல்லக் கடமைப்பட்ட வெளிப்படையான ஓர் ஆட்சிமுறை என்பது சனநாயகம் என்ற அருமை தத்துவம் நமக்களித்த அரிய கொடை.

    ஒரு
    வளமான குடிமைச் சமூகத்தின் இருப்புக்கும் இயக்கத்திற்கும் வெளிப்படையான தன்மை என்பது இன்றியமையாததாகும். ஒரு நிலப்பரப்பில் பாஸிஸம் தழைக்க வேண்டுமென்றால் அது மேற்சொன்ன - வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தின் அனைத்து உன்னத உயிர்நாடி அம்சங்களையும் பிடித்து நசுக்கி அழிக்க முயலும்.

    அன்று தேசத்தந்தையைக் கொன்றவர்கள் இன்று முழு தேசத்தையே கொல்லப் பார்க்கின்றார்கள்...